0

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை)











தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோவில் அமைப்பு: எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.

மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
சித்ரா பௌர்ணமி: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. இறைவனின் 5 சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.
0

உட்கார்ந்த நவக்கிரகங்கள்

உட்கார்ந்த நவக்கிரகங்கள்

மதுரைக்கு அருகில் உள்ளது நத்தம் கைலாசநாதர் கோவில். இங்குள்ள நவக்கிரகங் கள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் உள்ளன. இதுமாதிரி வேறுஎங்கும் இல்லை!


`ரிஷபாரூடர்!'

மதுரைக்கு அருகில் உள்ள விராதனூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் `ரிஷபாரூடர்' வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த உருவத்தில் வேறு எங்கும் சிவன் காட்சியளிப்பதில்லை.

தகவல்கள் அனைவரின் நலனை விரும்பி தேடி பதித்தது.

0

வில்வத்தின் விளைவு



வில்வத்தின் விளைவு

கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வில்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.
அதற்கு சிவன், "குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக" என அருள்புரிந்தார்
.

0

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
0

சூட்சுமம் திறந்த திருமந்திரம்!

ரு பெண்ணின் கருப்பையின் உள்ளே கருவானது எவ்வாறு உருவாகிறது என்பதை திருமந்திரப் பாடல்களின் வழியே கடந்த இதழில் கண்டோம். இனி அந்தக் கரு வளரும் நிலைகளில் என்னென்ன நிகழுகிறது என்று திருமூலர் கூறியுள்ள சில கருத்துக்களைக் காணலாம்.

ஒரு கரு உருவான உடனேயே அதில் உயிர் வந்துவிடுவதில்லை. பிராண சக்தியும், மறுபிறவி எடுக்கும் ஒரு ஆன்மாவும் அந்த கருப் பிண்டத்தின் உள்ளே நுழையும்போதுதான், அது செல்களின் குவியல் என்ற நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள ஒரு கருவாக உருவம் பெறுகிறது. அதுவரையில் நம் உடலிலுள்ள பல தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற முட்டையும் ஒரு தசை போன்றே கருதப்படும். பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

"பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்

தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்

மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்

கூவி, அவிழும் குறிகொண்ட போதே.'

-திருமந்திரம் பாடல் எண்-265.

தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட காலம் வரும்போது ஒரு மெல்லிய ஒலியோடு அந்த கருவின் உள்ளே புகும் என்பது இப்பாடலின் பொருளாகும். அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்து செல்களிலும் என வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும்.

இதற்கு உவமையாக திருமூலர் பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்! எவ்வளவு அற்புதமான ஒரு உவமை!

இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும். மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகின்றார்.

"போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டுடன் நாலு புரவியும்

பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.'

-திருமந்திரம் பாடல் எண்-266.

இந்த நான்கு வரிகளில் பல அற்புதமான சூட்சும உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வரியாக சற்றே விளக்கமாகக் காணலாம்.

முதல் இரண்டு வரிகளில், மூச்சுக்காற்று உள்ளே நுழையும் முன்னர் அந்தக் கருவினுள்ளே என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிடுகிறார். கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய உடலினுள்,

-போகின்ற எட்டு (8)

-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)

-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)

ஆகியவை உள்ளன. இவை எவையெவை என்பதைக் காணலாம்.

போகின்ற எட்டு

1. சுவை

2. ஒளி

3. ஊறு

4. ஓசை

5. வாசம்

6. மனம்

7. புத்தி

8. அகங்காரம்

ஆகிய அருவமாக உள்ள எட்டையே போகின்ற எட்டு என்கிறார் திருமூலர்.

புகுகின்ற பத்தெட்டு (18)

10 வாயுக்கள் 8 விகாரங்கள் ஆகியவற்றையே புகுகின்ற பத்தெட்டு என்கிறார்.

பத்து வாயுக்கள்

1. பிராணன்

2. அபானன்

3. உதானன்

4. வியானன்

5. சமானன்

6. நாகன்

7. கூர்மன்

8. கிருகரன்

9. தேவதத்தன்

10. தனஞ்செயன்

எட்டு விகாரங்கள்

1. காமம்

2. குரோதம்

3. உலோபம்

4. மோகம்

5. மதம்

6. மாச்சரியம்

7. துன்பம்

ஒன்பது வாயில்கள்

1. வலது கண்

2. இடது கண்

3. வலது நாசி

4. இடது நாசி

5. வலது காது

6. இடது காது

7. வாய்

8. குதம்

9. பிறப்புறுப்பு

என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம் ஒன்பது. இதையே இப்பாடலில் "ஒன்பது வாய்தலும்' என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது வரியில் வருகின்ற "மூழ்கின்ற முத்தனும்' என்னும் சொற்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை. கருப்பையினுள்ளே கரு பனிநீர் எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ எப்ன்ண்க் என்ற திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும் இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற' என்ற வார்த்தையை திருமூலர் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

"முத்தன்' என்ற சொல்லுக்கும் ஆழமான அர்த்தம் உள்ளது. கடவுளுக்கும்கூட "முத்தன்' என்றொரு பெயருண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் முறையே பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் செய்வதாகக் குறிப்பிட்டாலும் மூவரும் ஒருவர் என்பதே உயர்நிலைத் தத்துவம். மூன்று குணங்களை- செயல்களை உடைய கடவுள் "முத்தன்'.

கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன், தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த ஆவி)' என கடவுள் மூன்று நிலைகளில் இருந்தாலும், ஒரே கடவுளே என்ற கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.

கடவுளுக்குச் சரி; மூன்று நிலைகளில் ஒன்றாக இருப்பதால் முத்தன் எனலாம். கருவிலிருக்கும் குழந்தைக்கு "முத்தன்' என்ற சொல்லை திருமூலர் ஏன் பயன்படுத்துகிறார்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று உடல்கள் உள்ளன. நாம் கண்ணால் காணக்கூடிய பருவுடலை ஸ்தூல சரீரம் என்பார்கள். இது தவிர சூட்சும சரீரம், காரண சரீரம் என மேலும் இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இவை சக்தி நிலை உடல்கள் (Energy Bodies). சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்றும் இணைந்தே மனிதன் உருவாகிறான். கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும். மூன்று உடல்களால் உருவாவதால் கருவையும் திருமூலர் "முத்தன்' என்கிறார்.

இனி பாடலின் அடுத்த இரண்டு வரி களுக்கு வருவோம். முதல் இரண்டு வரிகளில் கருவில் என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிட்ட திருமூலர், அடுத்த இரு வரிகளில், "இவை அனைத்துமே ஒரு கருவில் இருந்தாலும், குண்டலினி சக்தி, பிராண சக்தி ஆகிய இரு சக்திகளை இறைவன் சரியான நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால் மட்டுமே, அந்தக் கரு வளர்ந்து ஒரு குழந்தையாக மாறும். அது நடைபெறாவிடில் கரு பாழாகிப் போகும்' என்கிறார்.

"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்' என்ற மூன்றாவது வரியை சற்றே அலசிப் பார்க்கலாம்.

குண்டலினி சக்தியையே "நாகம்' என குறிப்பிடுகிறார் திருமூலர். நமது உடலில் மூலாதாரச் சக்கரத்திற்கு அருகில் உறங்கிக் கிடக்கும் அற்புதமான சக்தியே குண்டலினி சக்தியாகும். சமஸ்கிருத மொழியில் "குண்டலா' என்றால் குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு கிடப்பது என்று பொருள்.

பாம்புகள் ஓய்வாக இருக்கும்போது சுருண்டே இருக்கும். எனவேதான் வடமொழி யில் பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும் உண்டு. தூக்கத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பைப் போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய நிலையில் மூலாதாரத்தின் அருகே சுருண்டு கிடக்கிறது. இந்திய மரபுப்படி சக்தி என்பதைப் பெண்பாலாகவும் தேவியாகவும் உருவகப்படுத்துவர். எனவேதான் சுருண்டு கிடக்கும் சக்திக்கு குண்டலினி, குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.

எதையும் நேரடியாகக் கூறாமல் சங்கேத வார்த்தைகளால் கூறுவது சித்தர் மரபு. எனவேதான் திருமூலர் குண்டலினியைக் குறிக்க "நாகம்' என்ற சங்கேத மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.

அடுத்து வரும் "எட்டுடன் நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம் கொண்டால் "12 குதிரைகள்' என்றே அர்த்தம் வரும். ஆனால் திருமூலர் இங்கே மூச்சுக்காற்றையே புரவி என்ற சங்கேத மொழியில் கூறுகிறார்.

சாதாரண மனிதர்களுக்கு மூச்சுக்காற்று கண்டத்திற்குக் கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும். யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு விரற்கடை பரந்து நிற்கும். இதையே எட்டுடன் நாலு புரவியும் என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.

கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற சொல் கடவுளைக் குறிக்கும் (சிவனை) சங்கேதச் சொல்லாகும். "பாகன்' என்பதற்கு செலுத்துபவன், கட்டுப்படுத்துபவன் என பல அர்த்தங்கள் உண்டு. குண்டலினி சக்தியையும் மூச்சுக்காற்றையும் கருவின் உள்ளே செலுத்து பவனாகையால் கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார். இவை இரண்டையும் பாகனாகிய கடவுள் அந்தக் கருவின் உள்ளே செலுத்தா மல் போனால் அந்தக் கரு வளர்ச்சியடையாது. வீணாகப் போய்விடும்.

ஐயன் வகுத்த திருக்குறளை சிறு அடிகளில் பெரும் உண்மைகளை விளக்கும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கொண்டாடுகிறோம். "கடுகைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று புகழ்வார்கள். திருவள்ளுவரின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல திருமூலரின் திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல் சான்றாக உள்ளதல்லவா? நான்கு வரிகளில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்!
0

தாய்மையின் அடையாளங்கள்

கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும்.
இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
1. மாத விலக்கு வராமை.
2. குமட்டல்,
3. இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
4. புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.
5. வாசனையைக் கண்டால் நெடி.
6. மார்பகம் பெரிதாவது, தொட்டால் வலி, நரம்புகள் புடைத்துத் தெரிதல், மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல் என மார்பகத்தில் மாற்றங்கள்.
7. மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு.
8. புளி, களிமண், ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கைகால்களும் உருவாகும். இக்காலக்கட்டத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக்குழந்தை பாதிக்கப்படும்.
முதல் அறிகுறிகள்:
முதல் அறிகுறிகள் எப்போதும் தனியாகவோ, பிற காரணிகளுடன் இணைந்தோ தோன்றக்கூடும். இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து கர்ப்பத்தை முடிவு செய்யாமல், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. காரணம், இந்த அறிகுறிகள் சிலவேளைகளில் குழப்பத்தையும் உண்டாக்கும்.
உதாரணத்திற்கு சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு ஆவது என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்காகவதுண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்க நின்றிருக்கும்.
இந்த நிலைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல்,புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடற்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குத் தொடராது. ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
சிலர் கர்ப்பம் தரித்திருப்பார்கள். ஆனால், மாதவிலக்கு வராமல் இருந்தாலும் தங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இவர்களுள் பாலூட்டும் காலத்திலேயே கருத்தரிப்பவர்கள், மாதவிலக்கு வற்றும் காலத்தில் கருத்தரிப்போர் ஆகியோரை உதாரணமாகக் கூறலாம்.

களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடற்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த பன்னிரண்டாவது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
பசலை நோய் அல்லது மசக்கை
இதை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் வருகிறது. மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கூறிய அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பலர் உறுதி செய்துகொள்கிறார்கள்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்னைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

பசலை நோய் அல்லது மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

முட்டையும் அணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படியிருந்தும் சக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
வேறு ஒன்றுமில்லை. தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு வேண்டிய சத்தையும் தாய் பெற வேண்டியுள்ள நிலையிருப்பதே ஆகும். இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகிலிருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
மார்பகப் பகுதியில் மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்திலுள்ள இரத்த நாளங்களும், மொத்தசுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவங்கள் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் மேற்சொன்ன மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

மனநிலை மாற்றமும், எடையில் மாற்றமும்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்கமுடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
வயிறு பெரிதாக…
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக பதினெட்டு முதல் இருபதாவது வாரங்களில் இந்தஅசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
மேலே குறிப்பிட்டுள்ள கருக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாக இருப்பதையும் நீங்கள்அறிந்திருப்பீர்கள். ஆகவே, இந்த அறிகுறிகளை மட்டும் அடையாளமாகக் கொண்டிராமல், கருவை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்
அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது. பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் மூன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் மூலம் விரைவாகவே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர்ப் பரிசோதனை
முதல் சிறுநீரை எடுத்துப் பரிசோதிப்பதற்காக கிட்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இவை பெரும்பாலும் எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதிலேயே கருத்தரித்திருப்பதால் அதற்கான அடையாளம் என்ன, கருத்தரியாவிட்டால் அதற்குரிய அடையாளம் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.
ஹார்மோன் பரிசோதனை
நம்பகமான பரிசோதனை முறை என்பது மாதவிலக்கு நின்ற நாளிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து செய்யப்படுகிறது. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் பாலியல் முதல் சிறுநீரைப் பிடித்து பரிசோதித்தால் அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்க வில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, இரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாதவாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது குயிக்கனிங் பரிசோதனை என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் கையாளுகிறார்கள்.
நன்றி: நியூவேர்ல்டு பப்ளிகேஷன்ஸ்.
0

எதிர்பார்ப்பு நிறைவேறியது : 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்










  புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவார்கள் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தங்க மகன்கள் அபினவ்பிந்த்ரா மற்றும் ககன்நரங் வீரமகன்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா தற்போது தங்கம் 5, வெள்ளி 4, வெண்கலம்2 என மொத்தம் 11 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8 தங்கம், 8 வெள்ளி 3 வெண்கலம் ‌பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 நேற்று முன் தினம் துவங்கிய காமன்வெல்த் கோலாகல போட்டியில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தாலும், கோலாகல துவக்க விழாவை அடுத்து இந்தியா தனது பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக்கொண்டது.